நன்றி குங்குமம் டாக்டர்
பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம். உலர் திராட்சையை அடிக்கடி உண்டு வர, கண்களில் ஏற்படும் சூட்டைக் குறைத்து, கண் பார்வையை மேம்படுத்தும்.
மலம், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையை அகற்றி, அவற்றின் வெளியேற்றத்தை எளிதாக்கும். உலர் திராட்சை லேசான இனிப்பு மற்றும் சிறிது துவர்ப்பான சுவையை கொண்டிருப்பதால் இது ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் இயல்புடையது. இது குளிர்ச்சித் தன்மையுடையது என்பதால் உடல் சூடாக இருப்பவர்கள் உலர் திராட்சையை தினமும் உண்டு வர, சூட்டைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியடையச் செய்யும்.இது செரிமானத்துக்கு கடினமானது. அதனால், மற்றப் பழங்களுடன் சேர்க்காமல் தனித்துச் சாப்பிடுவதே நல்லது.
வாய்க்கசிப்பினால் துன்பப்படும் நபர்களுக்கு உலர்திராட்சை வரப் பிரசாதமாகும். சிறியளவில் அடிக்கடி வாயினுள் போட்டுக் கடித்து, அதன் சாற்றுடன்
எச்சிலை விழுங்க வாய்க்கசப்பு விரைவில் அகலும். மதுபானம் அருந்தி, மயக்கத்தினால் தள்ளாடுபவர்களுக்கு உலர்திராட்சை கொடுக்க, விரைவில் தெளிவுறச்செய்து மயக்கத்தை அகற்றும், உலர் திராட்சையை உண்டு வர தண்ணீர் தாகம், வறட்டு இருமல், வாயு- பித்தங்களால் ஏற்படும் மூச்சிரைப்பு, குரல்வளை உடைந்து ஏற்படும் வலி மற்றும் சீராகப் பேச முடியாத நிலை ஆகியவை மாறும்.
தொடர் இருமலால் ஏற்படும் ரத்தக்கசிவு உபாதைக்கு உலர்திராட்சையை நெய்யில் வறுத்துச் சாப்பிடுவதன் மூலம் நல்ல குணம் பெறலாம்.பொன்னிறமாகக் கிடைக்கும் உலர் திராட்சைக்குத்தான் இத்தனை சிறப்புகள் என்றில்லை. கறுப்பு உலர்திராட்சையில் கொட்டைகள் இருப்பதால், பலரும் அதை விரும்புவதில்லை. ஆனால் அதற்கும் மேற்கூறிய மருத்துவக்குணங்கள் இருக்கின்றன.
இரவில் படுக்கும் முன் 8-10 உலர் திராட்சைகளை வெந்நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலை அவற்றைக் கசக்கிப் பிழிந்து நீரை மட்டும் வெறும் வயிற்றில் குடித்தால் கல்லீரலில் பித்த சுரப்பானது மட்டுப்படும். தினசரி உலர்திராட்சையை உண்டு வர தேவையில்லாத கோப – தாபங்களைத் தவிர்க்கலாம்.குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக பிஸ்கட் போன்றவற்றை சாப்பிட கொடுப்பதற்கு பதிலாக உலர் திராட்சையை சாப்பிட கொடுக்கலாம்.
தொகுப்பு: ரிஷி