சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த நிலையில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை நடத்தி வருகிறார். மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், வெள்ள தடுப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். பருவமழை காலத்தில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர்; கடந்த ஆண்டு பெய்த அதிக கன மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நினைவில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மரம் வெட்டும் உபகரணங்களை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய வாட்ஸ்ஆப் குழு உருவாக்க வேண்டும். மழை நீர் தேங்கும் இடங்களில் மோட்டார்கள், படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தாழ்வான பகுதியில் இருக்கும் மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுரை வழங்கினார்.