இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சந்திப்பில் மழைநீர் வடிகால் கால்வாய் பணி கடந்த ஒரு மாத காலமாக மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் காரணமாக இருபுறமும் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று இரவு 7 மணியளவில் சுமார் ஒரு மணி நேரம் மேற்கண்ட சந்திப்பில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசுப் பேருந்து, தனியார் பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் நின்றன. இதை அறிந்த பொதுமக்களே போக்குவரத்தை சரி செய்ய முற்பட்டனர்.
அப்போது ஆம்புலன்ஸ் சுமார் ஒரு மணி நேரம் உள்ளே சிக்கிக்கொண்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தது. அதை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்த பின்னர் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தினந்தோறும் இப்படி கடுமையாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. போதிய போலீசார் இல்லாததால் இப்படி அங்கு அடிக்கடி நிகழ்கிறது. இங்குள்ள மழை நீர் கால்வாயை உடனடியாக சீரமைத்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், தொழிலாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.