சில நாட்களுக்கு முன்புதான் நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முழுமையாக பரவியது. தற்போது தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஜூன் 1 முதல் 30ம் தேதி வரை 109 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 50 மி.மீ. அளவு மழை மட்டுமே கிடைக்கும். இதன்மூலம் வழக்கத்தைவிட கடந்த மாதம் 115 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வரும் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.