தூத்துக்குடி: தென்மாவட்ட வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தமிழக அரசு கேட்ட ரூ.37 ஆயிரம் கோடி நிவாரண நிதியை வழங்காத ஒன்றிய அரசை கண்டித்தும், உடனடியாக நிவாரண நிதியை முழுமையாக வழங்க வலியுறுத்தியும் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: வெள்ள நிவாரண நிதியாக ரூ.37 ஆயிரம் கோடியை தமிழக அரசு கேட்டுள்ளது. ஆனால் 37 பைசாகூட ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. தமிழக மக்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால் பாஜ ஆளுகின்ற மாநிலங்கள், ஆதரவாக இருக்கின்ற மாநிலங்களுக்கு அவர்கள் கேட்ட தொகையைவிட கூடுதலாக வழங்கி இருப்பதற்கான ஆதாரம் உள்ளது. ஒன்றிய அரசு தமிழக மக்களை வஞ்சிக்கும் நிலையிலும், பழிவாங்கும் நிலையிலும் செயல்படுகிறது. தமிழக அரசு கேட்ட ரூ.37 ஆயிரம் கோடியை வெள்ள நிவாரணமாக ஒன்றிய அரசு உடனே வழங்காவிட்டால் பல்வேறு கட்சிகளை இணைத்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.