Tuesday, September 17, 2024
Home » மழைக்கு மத்தியில் டெங்கு பீதி ஷிவமொக்கா மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்: சுறுசுறுப்பான பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்

மழைக்கு மத்தியில் டெங்கு பீதி ஷிவமொக்கா மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்: சுறுசுறுப்பான பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள்

by Ranjith

ஷிவமொக்கா: ஷிவமொக்கா மாவட்டத்தில், மழைக்கு மத்தியில் பொதுமக்களுக்கு, காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால், டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஷிவமொக்கா மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாவட்ட மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு, சாகர், தீர்த்தஹள்ளி, ஹோசாகர், ஷிகாரிபுரா, சொரபா, பத்ராவதி ஆகிய தாலுகா மருத்துவமனைகளில் 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 358 டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 47 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 2 பேர் இறந்துள்ளனர்.

ஷிகாரிபுரா தாலுகாவில் சில நாட்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தை தொற்று காரணமாக இறந்தது. இது அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிராலகொப்பா நகரில் ஒரு குழந்தை இறந்தது. டவுன் அரசு மருத்துவமனை கிராமப்புற சமூக நல மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலான நோயாளிகள் சளி, காய்ச்சல் தலைவலிக்கு சிகிச்சைக்காக காத்திருப்பது காணப்படுகிறது. தற்போதைய படுக்கை தட்டுப்பாடு ஓரளவுக்கு குறைந்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் படுக்கை வசதிக்கு இடப்பற்றாக்குறை உள்ளது. புதிய மருத்துவமனை கட்டிடம் கட்டி முடிவடையும் வரை படுக்கைகளுக்கு இடப்பற்றாக்குறை உள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாலுகா மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஷிவமொக்கா அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

டெங்கு காய்ச்சலை தடுக்க தாலுகா சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஜாதா லார்வா கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தண்ணீர் தேங்கியிருக்கும் குழிகளில் உள்ள லார்வாக்களை கணக்கெடுத்து கப்பி மீன்கள் விடப்பட்டன. டெங்கு பாதிப்புக்காக 1855 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. 83 பேரின் ரத்த மாதிரி பரிசோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது. ஷிகாரிபுரா தாலுகாவின் மல்லப்பூர், அம்பரகோப்பா மற்றும் காந்திநகர் கிராமங்களை சுகாதாரத் துறை ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் கண்டுள்ளது. இங்கு டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

நகர்ப்புறங்களில் உள்ள காலி மனைகளிலும், பூந்தொட்டிகளிலும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. கிராமகளில் சிமென்ட் தொட்டி மற்றும் வீட்டு நீர் சேமிப்பு பேரல்களில் காணப்படுகிறது. லார்வாக்கள் புதிய நீரில் உற்பத்தியாகின்றன. எனவே, அடிக்கடி துப்புரவு செய்ய மக்களுக்கு தெரிவிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், காய்ச்சல் வந்தவுடன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். 3 முதல் 4 நாட்கள் காய்ச்சல் மிக முக்கியமான நாட்கள்.

ஆனால் பெரும்பாலானவர்கள் கடைசி கட்டத்தில் சிகிச்சைக்கு வருகிறார்கள். சிலர், மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகிறார்கள். மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் மருத்துவர் சான்றிதழ் இல்லாமல் எக்காரணம் கொண்டும் யாருக்கும் மாத்திரை வழங்கக் கூடாது என சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஹெல்ப்லைன் ஆரம்பம்
மாவட்டத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை மூலம் ஹெல்ப்லைன் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடனடி உதவிக்கு 8762909482 அல்லது 9448337599 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட சுகாதார துறை தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

sixteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi