தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மேற்குதொடர்ச்சிமலை அடிவார பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றால அருவி மற்றும் ஐந்தருவி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மழை பெய்து கொண்டிருந்தபோதிலும் அருவியில் குளித்து கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் எச்சரித்து வெளியேற்றினர்.
காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததன் காரணமாக அறிவிப்பு பகுதிகளுக்கு யாரும் செல்லாமல் இருந்தனர். கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஐந்தருவியும், ஒரே அருவி போல் காட்சியளித்தது. பழைய குற்றாலத்தில் எந்தவொரு அறிகுறியுமின்றி திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.
மேலும் குத்தாலத்தில் உள்ள பிரதான அருவியிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்பாகவே அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.