சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் கூறி இருப்பதாவது: சென்னை அசோக் நகரில் சாலையோர மழைநீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், மழைநீர் தேங்கியிருந்த நிலையில், அம்பேத்கர் நகரை சேர்ந்த ஐயப்பன் (35) என்பவர் அதில் தவறிவிழுந்து மரணமடைந்துள்ளார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே தாங்காத மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள் என்ற அவல நிலை உள்ளது. மழைநீர் கால்வாய் பணி நடைபெறும் இடத்தில் தடுப்பு வைக்காததே இந்த உயிரிழப்புக்கு காரணம். எனவே, இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோன்ற நிகழ்வு எங்கும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.