திருப்போரூர்: மழை, புயலால் சேதமடைந்த ஓஎம்ஆர் சாலை சீரமைப்பு பணி துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் காரணமாக தையூர் ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் ஏரியின் உபரிநீர் ஓஎம்ஆர் சாலையை மூழ்கடித்து சென்றது. ஓஎம்ஆர் சாலையின் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாலை தடுப்புகள் அடித்து செல்லப்பட்டது.
சில இடங்களில் சாலை தடுப்புகள் சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். தற்போது வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்து உபரிநீர் வருவது முற்றிலும் நின்று விட்டது. இதையடுத்து சேதமடைந்த சாலைகளில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேதமடைந்த சாலைத்தடுப்புகளை சரிசெய்து வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.