சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் பொது இடங்களில் கண்காணிப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென்று மூத்த நீதிபதியாக இருந்த என்.கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். இதை ஏற்று அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது என்று ரயில்வே பதிலளிக்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது என கூறி, விசாரணையை செப்.4 க்கு தள்ளிவைத்தனர்.