செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, விரைவு ரயில் மோதி ரயில்வே ஊழியர் பரிதாபமாக பலியானார். செங்கல்பட்டு அடுத்த பரனூர் பாரதியார் முதல் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (50). இவர், தாம்பரம் ரயில் நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வேலைக்கு செல்ல, பரனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது, ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயில் மூர்த்தி மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், விரைந்து மூர்த்தியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.