பின்னர் அங்குள்ள தனியார் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் இணைந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மூவர்ண தேசியக் கொடியை கார்கே கொடுக்க, அதை ராகுல் பெற்றுக் கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்து பேசியதாவது: பாஜவின் அரசியலால் மணிப்பூர் மாநிலம் விலைமதிப்பற்ற விஷயங்களை இழந்து விட்டது. இங்கு லட்சக்கணக்கான மக்கள் இழப்புகளை சந்தித்துள்ளனர். ஆனால் உங்கள் கண்ணீரை துடைக்கவோ, கையை பிடித்து ஆறுதல் கூறவோ, உங்களை அரவணைக்கவோ பிரதமர் இங்கு வரவில்லை. ஒருவேளை பிரதமர் மோடியும், பாஜ, ஆர்எஸ்எஸ்சும் மணிப்பூரை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதாமல் இருக்கலாம். அதனால் உங்களின் வலி, அவர்களின் வலியாக உணராமல் உள்ளனர். மணிப்பூர் மக்கள் அனுபவித்த வலியை நாங்கள் புரிந்து கொள்கிறோம். உங்களின் காயம், சோகத்தை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு நல்லிணக்கம், அமைதி மற்றும் நேசத்தை நாங்கள் மீண்டும் கொண்டு வருவோம். இவ்வாறு ராகுல் கூறினார்.
முன்னதாக பேசிய மல்லிகார்ஜூனா கார்கே, ‘‘மணிப்பூருக்கு வாக்கு கேட்க மட்டுமே வரும் பிரதமர் மோடியால், இங்கு மக்கள் வேதனையில் இருக்கும் போது அவர்களின் துயரத்தை பகிர்ந்து கொள்ள வர முடியவில்லை. கடலில் ஓடவும், குளிக்கவும் நேரமிருக்கிறது. ஆனால் மணிப்பூருக்கு வர அவருக்கு நேரமில்லை. ‘ராம், ராம்’ என கோஷமிடுகிறார். ஆனால் ஓட்டுக்காக செய்யக்கூடாது. பாஜ மதத்தையும் அரசியலையும் கலக்கிறது. மக்களைத் தூண்டுகிறது. உதட்டில் ராமரையும், பக்கத்தில் கத்தியை வைத்திருக்கிறார்கள். சமூக நீதி, மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்திற்கு காங்கிரஸ் துணை நிற்கிறது. அரசியல் சாசனம், ஜனநாயகத்தை காப்பாற்றவும், பாசிச சக்திகளுக்கு எதிராக போராடவும் ராகுல் இந்த நீதி யாத்திரையை மேற்கொண்டுள்ளார்’’ என்றார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், ஆளும் பாஜ கட்சி அயோத்தி ராமர் கோயில் மீது கவனம் செலுத்தி வரும் நிலையில், 9 ஆண்டு பாஜ ஆட்சியில் மக்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கு நியாயம் கேட்டு ராகுல் 2ம் கட்ட நடைபயணம் தொடங்கியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.