பெங்களூரு: நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை தீவிரவாதி என்று விமர்சனம் செய்த புகாரில் ஒன்றிய அமைச்சர் ரவ்நீத்சிங்பிட்டு மீது பெங்களூரு ஐகிரவுண்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து கீழ்தரமாக விமர்சனம் செய்ததாக முன்னாள் ஒன்றிய இணையமைச்சரும் தற்போதைய விஜயபுரா நகர தொகுதி பாஜ சட்டப்பேரவை உறுப்பினர் பசனகவுடா பாட்டீல் யத்னால் மீது கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் மனோகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனிடையில் கடந்த 15ம் தேதி பீகார் மாநிலத்தில் வந்தேபாரத் ரயில் சேவை துவக்க விழாவில் கலந்து கொண்டு ஒன்றிய அமைச்சர் ரவ்நீத்சிங் பிட்டு பேசும்போது, ராகுல்காந்தி இந்திய தேசத்திற்கு பெரிய எதிரி, அவர் தீவிரவாதி என்று விமர்சனம் செய்ததாகவும் பிற மதத்தினரை இழிவுப்படுத்தியதாகவும் வீடியோ ஆதாரத்துடன் காங்கிரஸ் பிரமுகர் ரவீந்திரா, பெங்களூரு ஐகிரவுண்ட் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதையேற்று போலீசார் ஒன்றிய அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.