லக்னோ: உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசிய முன்னாள் எம்எல்ஏ.வை கட்சியில் இருந்து நீக்கி மாயாவதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். உத்தர பிரதேசத்தின் ஷகரான்பூர் மாவட்டத்தில் உள்ள முசாபராபாத் தொகுதி எம்எல்ஏ.வாக கடந்த 2007ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றவர் இம்ரான் மசூத். கடந்த 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஷகரான்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். உ.பி.யில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். இதனிடையே, கடந்த வாரம் அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில், மசூத் கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.