புதுடெல்லி: ராகுலின் இந்திய ஒற்றுமை நடைபயணம் துவங்கி ஓராண்டு நிறைவையொட்டி, நாளை மறுநாள் 722 மாவட்டங்களில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஒன்றிய பாஜ அரசின் வெறுப்புணர்வு அரசியலை கண்டித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். இது கடந்த ஜனவரி 30ம் தேதி நகரில் நிறைவடைந்தது. இதன் போது, 4,000 கிலோ மீட்டர் தூரம் பயணித்த ராகுலை அரசியல், சினிமா, ராணுவம், எழுத்தாளர்கள் என பல்வேறு தரப்பு பிரபலங்கள் சந்தித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி வேணுகோபால், “இந்திய ஒற்றுமை நடைபயணம் துவங்கியதன் ஓராண்டு நிறைவையொட்டி, 722 மாவட்டங்களில் ஒற்றுமை நடைபயணம் வரும் செப்டம்பர் 7ம் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரை காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள், கட்சியின் மாநிலப் பொறுப்பாளர்கள், எம்எல்ஏ.க்கள் மற்றும் எம்பி.க்களால் நாடு முழுவதும் நடத்தப்படும்,’’ என்று தெரிவித்தார்.