இதற்கிடையே, ரபேல் விமானங்களை போலவே அமெரிக்க டிரோனையும் இந்தியா அதிக விலை கொடுத்து வாங்குவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே குற்றம்சாட்டி இருந்தார். மற்ற நாடுகள் வாங்குவதை விட இந்தியா 3 மடங்கு அதிக விலை கொடுத்து டிரோன்களை வாங்குவதாக அவர் புள்ளிவிவரங்களுடன் பதிவிட்டிருந்தார். இதனை ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது. நேற்று விடுக்கப்பட்ட அறிக்கையில், ‘டிரோன் விலை மற்றும் கொள்முதல் விதிமுறைகள் குறித்து சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் ஊகத்தின் அடிப்படையிலானவை. அவை உண்மையில்லை. அவற்றை யாரும் பகிர வேண்டாம். 31 டிரோன்களின் விலை சுமார் ரூ.25 ஆயிரம் கோடி என அமெரிக்க அரசு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிடம் இருந்து கொள்கை ஒப்புதல் பெறப்பட்ட பிறகு விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போது மற்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட விலையை வைத்து இறுதி செய்யப்படும். இப்போதைக்கு எந்த விலையும் நிர்ணயம் செய்யப்படவில்லை’ என கூறப்பட்டுள்ளது.