ராதிகாவுக்கு கொடுத்தா போராட்டம் நடத்துவேன் விருதுநகர் எனக்குதான் பாஜ நிர்வாகி அட்ராசிட்டி

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை பாஜ மேற்கு மாவட்ட விவசாயி அணியில் மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜ சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் பாஜ கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ராதிகா சரத்குமார் விருதுநகரில் போட்டியிடப் போவதாகவும் தகவல் வெளியானது.

இதனால் அதிருப்தியடைந்த டாக்டர் வேதா எக்ஸ் தளத்தில் பாஜ தேசிய தலைவர் நட்டா மற்றும் பிரதமர் மோடியை டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், விருதுநகரை கூட்டணிக்கு ஒதுக்கக்கூடாது. விருதுநகர் தொகுதி மோடிக்கானது. விருதுநகரின் வெற்றி வேட்பாளர் டாக்டர் வேதா என பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘விருதுநகர் தொகுதியை கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளராக ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன்.

விருதுநகர் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கக் கூடாது. முக்குலத்தோர் வாக்குகள் அதிகமாக உள்ள விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை, முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த எனக்குத்தான் ஒதுக்க வேண்டும். எங்கள் தந்தை மற்றும் குடும்பத்தினர் இணைந்து இதுவரை 170க்கு மேல் கோயில்களை அனைத்து சமுதாயத்திற்கும் கட்டிக் கொடுத்துள்ளோம்.

மேலும் நீதிமன்றத்தில் பல்வேறு பொது விஷயங்களுக்காக வழக்குகளை தொடுத்துள்ளேன். ஆகவே என்னால் உறுதியாக வெற்றி பெற முடியும். எனவே விருதுநகரில் பாஜ போட்டியிட வேண்டும். கூட்டணிக்கு சீட்டை ஒதுக்கி விடக்கூடாது. குறிப்பாக என்னை பாஜ வேட்பாளராக அறிவிக்க வேண்டும். இல்லாவிடில் வருகிற 13ம் தேதி கப்பலூர் டோல்கட்டில் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவேன்,’என்றார்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்