சிவகங்கை: தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜக தான் போட்டியிடும் எனவும் அதனால் தேர்தல் பணியை இப்போதே தொடங்க வேண்டும் எனவும் ஹெச்.ராஜா அறிவுறுத்தியுள்ளார்.
சிவகங்கையில் பாஜக நிறுவனத் தினத்தையொட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியதாவது: ”வாரந்தோறும் கிளைக் கூட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சினை தெரிந்துகொள்ள வேண்டும்.
வீடுகள்தோறும் ஒன்றிய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். உலகில் 23 ஆண்டுகள் தொடர்ந்து நிர்வாகத்தை ஆட்சி செய்யும் ஒரே அரசியல் தலைவர் மோடிதான். நான் தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன். ஆனால் சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜக தான் போட்டியிடும். அதனால் இப்போதே தேர்தல் பணியை தொடங்க வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக நிறுவனத் தினத்தையொட்டி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, நகரத் தலைவர் உதயா, முன்னாள் மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.