புதுடெல்லி: அவை நடக்கும்போது கவனமுடன் இல்லையென்றால் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பஞ்சாப் தொடர்பாக சிரோமணி அகாலி தள எம்பி ஹர்சிம்ரத் கவுர் பாதல் எழுப்பிய கேள்வி விவாதத்திற்காக பட்டியலிடப்பட்டது. இதனை தொடர்ந்து அவையில் சபாநாயகர் பிர்லா, அகாலி தள எம்பி ஹர்சிம்ரத் கவுரை பேசுவதற்கு அழைத்தார்.
ஆனால் அவர் அருகில் இருந்த சக எம்பியுடன் பேசிக்கொண்டு இருந்ததால் தனது பெயர் அழைக்கப்பட்டதை கவனிக்க தவறிவிட்டார். இதனையடுத்து சபாநாயகர் அடுத்த கேள்விக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் அகாலி தள எம்பி சபாநாயகரிடம் துணை கேள்வி எழுப்ப தன்னை அனுமதிக்குமாறு வலியுறுத்தினார்.
இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில்,\\” மூன்று முறை உங்களது பெயரை அழைத்தேன். ஆனால் நீங்கள் பேசுவதில் மும்முரமாக இருந்தீர்கள். உங்களது கேள்வி பட்டியலிடப்படும்போது நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் அவை நடவடிக்கையின்போது கவனம் செலுத்தாவிட்டால் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது” என்றார்.