சீனாவைச் சேர்ந்த, உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி ஆட்டோ, சீல் என்ற எலக்ட்ரிக் காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கெனவே அட்டோ 3 என்ற எஸ்யுவியையும், இ6 என்ற எம்பிவியையும் இந்தியச் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் சந்தைப்படுத்தியுள்ள 3வது கார் இது. இந்தக் கார் கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆட்டோ வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதில் டைனமிக், பிரீமியம் மற்றும் பர்பாமென்ஸ் என்ற 3 வேரியண்ட்கள் உள்ளன. டைனமிக்கில் 61.44 கிலோவாட் அவர் பேட்டரி உள்ளது. இது அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 310 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். பிரீமியம் 308 பிஎச்பி பவர், 360 என்எம் டார்க், பர்பாமென்ஸ் 522 பிஎச்பி பவர் , 670 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, தொடுதிரையுடன் கூடிய சுழலக்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. ஆர்டிக் புளூ, அட்லாண்டிஸ் கிரே, அரோரா ஒயிட் மற்றும் காஸ்மோஸ் பிளாக் என 4 வண்ணங்களில் கிடைக்கும். முழுமையாக சார்ஜ் செய்தால் வேரியண்ட்டுக்கு ஏற்ப குறைந்த பட்சம் 510 கிலோ மீட்டர் முதல் 650 கி.மீ தூரம் வரை செல்லும். ஷோரூம் விலையாக டைனமிக் சுமார் ’ரூ.41 லட்சம், பிரீமியம் சுமார் ரூ. 45.55 லட்சம், பர்பாமென்ஸ் சுமார் ரூ.53 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பிஒய்டி சீல்
previous post