Saturday, September 7, 2024
Home » புழல் சிறையில் உள்ள கேண்டினில் மாதம் ரூ.25,000 வரை ஜி- பே மூலம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் பணியிட மாற்றம்..!!

புழல் சிறையில் உள்ள கேண்டினில் மாதம் ரூ.25,000 வரை ஜி- பே மூலம் லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் பணியிட மாற்றம்..!!

by Kalaivani Saravanan

சென்னை: புழல் சிறையில் உள்ள கேண்டினில் லஞ்சம் வாங்கிய புகாரில் தலைமை காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் லஞ்ச புகாரின் காரணமாக புழல் மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக கேண்டீனில் மாதம் மாதம் லஞ்சம் வாங்கிய விஜிலென்ஸ் தலைமை காவலரை பணியிட மாற்றம் செய்து சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். புழல் சிறைத்துறை காவலர் குடியிருப்பில் வசித்து வசிப்பவர் ராஜேஷ்.

இவர் சென்னை புழல் சிறை 2ல் விஜிலென்ஸ் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். புழல் சிறை ஒன்றில் கடந்த 6 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வருபவர், அயல் பணிக்காக புழல் சிறை 2ல் விஜிலென்ஸ் பிரிவில் பணியாற்றுகிறார். இந்நிலையில், புழல் சிறையில் உள்ள கேண்டினில் மாதம் சுமார் ரூ. 25,000 வரை லஞ்சம் வாங்கி வந்ததாக ராஜேஷ் மீது தொடர்ந்து புகார் எழுந்தது. இது தொடர்பாக வார்டன் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அச்சமயம் தலைமை காவலர் ராஜேஷ், கேண்டினில் மாதம் ரூ.25,000 வரை ஜி- பே மூலம் லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து ராஜேஷை புழல் 2ம் விஜிலென்ஸ் பிரிவில் இருந்து, சிறை 1க்கு பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டுள்ளனர். சிறை காவலர் ராஜேஷிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புழல் சிறையில் உள்ள கேண்டீனில் டீ, காபி உள்ளிட்டவைகளை 50 ரூபாய்க்கும், பிரியாணி போன்றவை 700, பீடி கட்டுகள் 400 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து தொடர் சோதனை நடைபெற்று வரும் சூழலில் விஜிலென்ஸ் தலைமை காவலர் கேண்டீனில் லஞ்சம் பெற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

thirteen + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi