தாம்பரம்: புழல் – தாம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள சாலை தடுப்புகளில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக யு-டர்ன் அமைத்து உள்ளூர் வாகனங்கள், குறிப்பாக லாரிகள் மற்றும் மினிவேன்கள் குறுக்குவழிகளில் செல்கின்றன. அருகே அமைந்துள்ள குடோன்கள் மற்றும் சிறிய அளவிலான தொழிற்சாலைகளுக்கு சரக்குகளை இறக்க, ஏற்ற இந்த சாலைகளின் ஓரங்களில் கனரக மற்றும் நடுத்தர அளவிலான வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்படுகின்றன. ஆபத்தான வகையில், இந்த யு-டர்ன்களில் சில கூர்மையான வளைவுகளுக்கு அருகில் அமைந்துள்ளன.
இந்த சாலையில் அதிகாரப்பூர்வமான நுழைவு அல்லது வெளியேறும் இடங்கள் இல்லை. மேலும் சென்னையின் இரண்டாவது ஆபத்தான சாலையாக இது கருதப்படுகிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி ஆண்டுதோறும் 140க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகின்றன.சட்டவிரோத யு-டர்ன்கள் இருப்பது விபத்துகளின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. வேகமாகச் செல்லும் வாகனங்கள், முன்னால் எந்தத் திருப்பத்தையும் எதிர்பார்க்காமல், ஒரு மூலையைச் சுற்றி யு-டர்ன் செய்யும் லாரிகள் அல்லது ஆட்டோவை எதிர்கொண்டால், திடீரென பிரேக் பிடிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, இந்த சட்டவிரோத யு-டர்ன்களை விரைவில் மூடுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். வணிக வாகனங்கள் தவிர, பல உள்ளூர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களும் தவறான பக்கத்தில் ஓட்டி இந்த யு-டர்ன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அனகாபுத்தூர், திருநீர்மலை, தண்டலம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் தற்போது தாம்பரம் மற்றும் போரூருக்கு செல்ல பைபாஸ் ரோட்டின் தவறான பக்கத்தில் அடிக்கடி வாகனங்களை ஓட்டி யு-டர்ன் செய்து வருகின்றனர்.