இதன் காரணமாக, கலைஞர் நகர், சிபிசிஎல் நகர், அப்போலோ ஆம்ஸ்ட்ராங் நகர், சின்னசாமி நகர், மணலி புதுநகர், எலந்தனூர், பர்மா நகர், அரியலூர், கொசப்பூர், சடையங்குப்பம் போன்ற பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஆற்றுப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக பொதுப்பணி துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘மணலி மண்டலத்துக்குட்பட்ட ஆமுல்லைவாயல் முதல் சடையங்குப்பம் வரை உபரிநீர் கால்வாய் முழுவதும் மணல் திட்டுகள் அடைத்து கிடக்கிறது.
இந்த நீர் வழிப்பாதையில் ஒரு சில தனியார்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அங்கு லாரி ஷெட்டுகளை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளனர். இவ்வாறு அரசின் தரிசு நிலமாக உள்ள இந்த நீர் வழிப்பாதை நிலத்திற்கு வருவாய்த் துறையில் உள்ள சில அதிகாரிகள் துணையுடன் போலி ஆவணங்கள் தயாரித்து அதற்கு பட்டா பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நீர்வழி பாதையில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்தால் மணலி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மழைநீர் புகுந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரி நீர்வழி பாதையை தூர்வாரி சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.