புழல்: புழல் சிறைக் கைதி உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(56). இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி கஞ்சா வழக்கில் சென்னை முத்தியால்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நடராஜனுக்கு சர்க்கரை நோய் தீவிரமானதால் சிறைத்துறை சார்பில் கடந்த 4ம் தேதி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நடராஜன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் நடராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.