திருவொற்றியூர்: மணலி புதுநகரில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில் ஆண்டுதோறும் 10 நாள் புரட்டாசி திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டு 10 நாள் புரட்டாசி திருவிழா நிகழ்ச்சிகள் இன்று காலை அய்யா வைகுண்டர் தர்மபதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருநாமக் கொடியை அய்யாவின் பக்தர்கள் கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும், கொடிமரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வலம் வந்தனர். பின்னர் பதிவலம் வந்து, காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்றிரவு 8 மணியளவில் காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார்.
தேர் திருவிழாவை முன்னிட்டு, வரும் நாட்களில் நாள்தோறும் மாலை வேளைகளில் திருஏடு வாசிப்பு நடைபெறும். பின்னர், ஒவ்வொரு நாள் இரவும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார். இவ்விழாவின் 8வது நாளான 11ம் தேதி இரவு 8 மணியளவில் சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, 8.30 மணியளவில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 6 மணியளவில் பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணியளவில் திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதைத் தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் அய்யா திருத்தேரில் வீதியுலா வருகிறார்.
இதில் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். கொடியேற்றத்துக்கு முன்னதாக, அய்யா வைகுண்ட தர்மபதி வளாகத்தில், இன்று காலை புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொது செயலாளர் ஏ.சுவாமிநாதன், பொருளாளர் பி.ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி.ஐவென்ஸ், துணை செயலாளர் வி.சுந்தரேசன், இணை பொது செயலாளர் கே.ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.