திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மலைக்கோயிலில் குவிந்தனர். அவர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து 3 மணி நேரம் கழித்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, கிருத்திகை விழாவையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தினர். தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடத்தினர்.
இன்று காலை 10 மணிக்கு காவடி மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது காவடி மண்டபத்தில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘’ கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா’’ என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.