Sunday, June 30, 2024
Home » மழையால் ஆட்டம் பாதிப்பு 7 ரன்னில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: கேகேஆர் ஏமாற்றம்

மழையால் ஆட்டம் பாதிப்பு 7 ரன்னில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி: கேகேஆர் ஏமாற்றம்

by Francis

மொகாலி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டம், கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி டிஎல்எஸ் விதிப்படி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசியது. பிரப்சிம்ரன் சிங், கேப்டன் ஷிகர் தவான் இருவரும் பஞ்சாப் கிங்ஸ் இன்னிங்சை தொடங்கினர். முதல் 2 ஓவரையும் எதிர்கொண்ட பிரப்சிம்ரன் 23 ரன் விளாசி (12 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) சவுத்தீ வேகத்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் வசம் பிடிபட்டார். அடுத்து தவானுடன் பானுகா ராஜபக்ச இணைந்தார்.
பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்தது. ராஜபக்ச 50 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். ஜிதேஷ் ஷர்மா 21 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிகர் தவான் 40 ரன் (29 பந்து, 6 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். சிக்கந்தர் ரஸா 16 ரன் (13 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சுனில் நரைன் சுழலில் ராணா வசம் பிடிபட்டார்.

பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன் குவித்தது. சாம் கரன் 26 ரன் (17 பந்து, 2 சிக்சர்), ஷாருக் கான் 11 ரன்னுடன் (7 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் டிம் சவுத்தீ 2, உமேஷ் யாதவ், சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.


இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேகேஆர் அணி களமிறங்கியது. மின்விளக்குகள் பழுது காரணமாக கேகேஆர் இன்னிங்ஸ் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டது. பின்னர் தொடங்கிய ஆட்டத்தில், மன்தீப் சிங் 2 ரன், அனுகுல் ராய் 4 ரன் எடுத்து அர்ஷ்தீப் சிங் வேகத்தில் விக்கெட்டை பறிகொடுக்க, கொல்கத்தா அணி 2 ஓவரில் 17 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறியது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் 22 ரன் விளாசி எல்லிஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். வெங்கடேஷ் அய்யர் – கேப்டன் நிதிஷ் ராணா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. ராணா 24 ரன், ரிங்கு சிங் 4 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கேகேஆர் 10.1 ஓவரில் 80 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், வெங்கடேஷ் – ஆந்த்ரே ரஸ்ஸல் இணைந்து 6வது விக்கெட்டுக்கு அதிரடியாக 50 ரன் சேர்த்தனர்.இதனால், கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.

ரஸ்ஸல் 35 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), வெங்கடேஷ் 34 ரன் (28 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அடுத்தடுத்து ஆட்டமிழக்க, வெற்றி யாருக்கு என்பதில் இழுபறி நிலவியது. கொல்கத்தா அணி 16 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்திருந்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஷர்துல் தாகூர் 8 ரன், சுனில் நரைன் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் 3, சாம், எல்லிஸ், சிக்கந்தர், ராகுல் சாஹர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

மழை தொடர்ந்து பெய்ததால், டிஎல்எஸ் விதிப்படி பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் வென்றதாக நடுவர்கள் அறிவித்தனர். அர்ஷ்தீப் சிங் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பஞ்சாப் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. வெற்றி வாய்ப்பு இருந்தும், மழை காரணமாக தோல்வியைத் தழுவ நேர்ந்தது கேகேஆர் அணி வீரர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

You may also like

Leave a Comment

10 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi