பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் பலி: உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு

சண்டிகர்: பஞ்சாப் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் பலியானார்கள். இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கியுள்ளனர். இங்கு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் சாகர் பன்னே (25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) ஆகிய 4 வீரர்கள் பலியானார்கள். அவர்கள் பீரங்கி படை பிரிவை சேர்ந்தவர்கள். உடனே, ராணுவத்தின் அதிவிரைவுப்படை விரைந்தது. முகாமை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதில் வேறு யாருக்கும் காயமோ, சொத்துகளுக்கு சேதமோ ஏற்படவில்லை என்று தென்மேற்கு ராணுவ தலைமையகம் தெரிவித்தது. மேலும், தகவலறிந்து பஞ்சாப் போலீசாரும் விரைந்தனர். பதிண்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஜய்காந்தி, விசாரணை குழுவுக்கு தலைமை பொறுப்பேற்றுள்ளார். அனைத்து தடயவியல் உபகரணங்களுடன் முகாமுக்குள் சென்று ஆய்வு நடத்தினார். ‘இன்சாஸ்’ துப்பாக்கியின் 19 காலி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டது. சாதாரண உடையில் 2 பேர் வந்து துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்த ஒரு ராணுவ வீரர், அஜய்காந்தியிடம் தெரிவித்தார். ஆனால், யார் சுட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அஜய்காந்தி கூறினார். முகாமில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்.

இதற்கிடையே, ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்று தெரிய வந்தது. ராணுவ வீரர்களிடையே நிலவிய உட்பூசலால் துப்பாக்கி சண்டை நடந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முகாமில் இருந்த ஒரு ‘இன்சாஸ்’ துப்பாக்கியும், 28 ரவுண்டு தோட்டாக்களும் 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனது பற்றி புகார் செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த தேடுதலின்போது, காணாமல் போன துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தோட்டா உறையும் இருந்தது. இரண்டும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதில்தான் எத்தனை தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன என்று தெரிய வரும். இந்த மோதலுக்கு ‘இன்சாஸ்’ துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மோதலுக்கான உண்மை காரணத்தை கண்டறிய போலீசுடன் இணைந்து ராணுவம் உயர்மட்ட விசாரணை நடத்தி வருகிறது. ராணுவ கோர்ட் விசாரணையும் நடத்தப்படும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. முகாம் தொடர்ந்து ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. சம்பவம் குறித்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் ராணுவ தளபதி மனோஜ் பாண்டே விளக்கி கூறியுள்ளார்.

மேலும் ஒரு ராணுவ வீரர் பலி
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் மேலும் ஒரு ராணுவ வீரர் நேற்றிரவு உயிரிழந்தார். தனது துப்பாக்கியை சரிபார்க்கும் போது தவறுதலாக குண்டு பாய்ந்து லகுராஜ் சங்கர் என்பவர் உயிரிழந்தார். நேற்று அதிகாலை இதே முகாமில் 4 வீரர்கள் சுட்டு கொல்லப்பட்ட நிகழ்வின் அதிர்ச்சி விலகாத நிலையில் இரவில் மேலும் ஒரு வீரர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலையில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராணுவம் தெரிவித்துள்ளது. விடுப்பில் இருந்து மீண்டும் பணிக்கு திரும்பிய நிலையில் லகுராஜ் இறந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பாஸ்போர்ட் இணையதளம் இயங்காது

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு