பூந்தமல்லி: பூந்தமல்லி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. பூந்தமல்லி உள்ள குமணன்சாவடியில் மிகவும் பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயில் உள்ளது. அங்கு, ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் தர்மகர்த்தா பூவை ஞானம் தலைமையில் கும்பாபிஷேக விழா குழு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு கடந்த மே மாதம் 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜைகள் நடைபெற்று வந்தன.
ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஒவ்வொரு விதமான அலங்காரமும் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக, நேற்று மண்டல பூஜை நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு யாகங்களும் பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் விசேஷ அலங்காரமும் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் தர்மகர்த்தா பூவை. ஞானம், நிர்மலா ஞானம், பூந்தமல்லி ஒன்றிய சேர்மன் ஜெயக்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.