Sunday, September 8, 2024
Home » மனைவியின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய புதுமாப்பிள்ளை: போலீஸ் விசாரணையில் ‘திடுக்’

மனைவியின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய புதுமாப்பிள்ளை: போலீஸ் விசாரணையில் ‘திடுக்’

by Arun Kumar

சேலம்: காதல் திருமணம் செய்த பத்து நாளில் புதுமாப்பிள்ளை கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க உறவினர்களிடம் 2 லட்சம் கேட்டதால் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இக்கொலை சம்பந்தமாக 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் நியூ திருச்சி மெயின் ரோடு லைன்மேட் சேர்ந்தவர் சையத் சபீ. இவரது மகன் முபராக் (22). இவர் நேற்று காலை சேலம் கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகேயுள்ள பெருமாள் கோயில் பகுதியில் முட்புதரில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று முபராக் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், `முபராக் எட்டாவது வரை படித்து விட்டு மூனாங்கரட்டில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை செய்த லைன்மேட்டை சேர்ந்த அக்பர் அலியின் மகள் ஷாஜினியை (21) பத்து நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனிடையே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஷாஜினி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது முபராக், தனது மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்று ஷாஜினியின் உறவினர்களிடம் மிரட்டியுள்ளார். இதையடுத்து ஷாஜினியின் பெற்றோர், உறவினர்கள், முபராக்கை பேச வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் செல்லவில்லை.

இதனிடையே நேற்று முன்தினம் முபராக் ஆம்பூருக்கு ரயிலில் சென்றுவிட்டு மீணடும் சேலத்துக்கு மாலையில் வந்துள்ளார். இதையறிந்த ஷாஜினியின் உறவினர்கள் பையாஸ், அவரது நண்பர்கள் மற்றொரு முபராக், யாசின் ஆகிய மூன்று பேரும் முபாரக்கை பைக்கில் கந்தம்பட்டி ரயில்வே கேட் அருகே அழைத்து கொண்டு வந்து பேசியுள்ளனர். அப்போதும் முபராக், ஷாஜினியின் அந்தரங்க படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் முபராக்கை கழுத்தை அறுத்தும், முகத்தை சிதைத்தும் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்` என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், முபராக் தனது மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் ₹2 லட்சம் பணம் தர வேண்டும் என்று உறவினர்களிடம் கேட்டுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில் தான் பையாஸ் மற்றும் அவரது நண்பர்கள் முபராக், யாசின் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து முபராக்கை கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இதுபற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi