பாஜகவினர் அட்டூழியம்!: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தேநீர் கடையை மறைத்து பாஜகவின் விளம்பர பதாகை..உரிமையாளர் போலீசில் புகார்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தேநீர் கடையை மறைத்து பாஜகவினர் வைத்துள்ள விளம்பர பதாகையால் கடையை கூட திறக்க முடியவில்லை என்று உரிமையாளர் போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தனது நடைப்பயணத்தின் 6வது நாளில் திருமயம் மற்றும் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். இதனையொட்டி ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையிலும், சந்தைப்பேட்டை பகுதிகளிலும், செட்டிகுளம் அருகிலும் பாஜகவினர் விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை சாலையில் முத்துக்குமார் என்பவரின் குளிர்பானம் மற்றும் தேநீர் கடையை மறைத்து பெரிய பெரிய விளம்பர பதாகைகளை பாஜகவினர் கட்டியுள்ளனர். கடையை மறைத்து பதாகை கட்டியதால் தன்னால் கடையை கூட திறக்க முடியவில்லை என்று ஆலங்குடி காவல் நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளித்துள்ளார். தன்னிடம் அனுமதியே பெறாமல் பாஜகவினர் பதாகைகளை கட்டியதாகவும், கடையை மறைக்காமல் கொஞ்சம் மேலே ஏற்றுக் கட்டுங்கள் என்று தான் கூறியதை கூட அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு இடையூறாக விளம்பர பதாகைகளை வைக்க கூடாது என நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையிலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் செல்லும் இடமெல்லாம் பெரிய பெரிய விளம்பர பதாகைகளை பாஜகவினர் வைத்துள்ளனர். இது பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உதகையில் குதிரை பந்தய மைதானத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல்..!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை மாற்றமின்றி சவரன் ரூ.54,080-க்கு விற்பனை!!

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செங்கல் விலை உயர்வு..!!