புதுக்கோட்டை: நமணசமுத்திரம் அருகே புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கார் மோதி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா. இவர் இன்று பணி நிமித்தமாக திருமயம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். காரை டிரைவர் காமராஜ் ஓட்டினார். இந்நிலையில், காரைக்குடி – திருச்சி நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற இடத்தில் கோட்டாட்சியர் சென்ற கார் சென்றபோது சாலையில் எதிரே அரசு பேருந்தும், பைக்கும் வந்துள்ளது. பேருந்தை முந்திக்கொண்டு வந்த பைக் எதிரே வந்த வருவாய் கோட்டாட்சியரின் கார் மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வருவாய் கோட்டாட்சியரின் கார் டிரைவர் காமராஜுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் கார் டிரைவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.