Thursday, September 19, 2024
Home » புதுக்கோட்டையில் பரபரப்பு.. குடும்பத்தகராறில் தற்கொலை செய்த பெண்ணின் சடலத்தை கணவர் வீட்டு வாசலில் எரித்த உறவினர்கள்!!

புதுக்கோட்டையில் பரபரப்பு.. குடும்பத்தகராறில் தற்கொலை செய்த பெண்ணின் சடலத்தை கணவர் வீட்டு வாசலில் எரித்த உறவினர்கள்!!

by Nithya

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே குடும்பத்தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மனைவி சடலத்தை அவரது உறவினர்கள் கணவரின் வீட்டு வாசலில் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வெட்டன் விடுதி அருகே தெற்கு பொன்னன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் பழனிராஜ். கூலித்தொழிலாளி.

இவரது மனைவி புவனேஸ்வரி (27). இருவருக்கும் 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான நாள் முதல் இருவருக்கும் இடையே உடன்பாடு இல்லாமல் புவனேஸ்வரி 2 வருடங்களாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இதனால் பழனிராஜ் அதே ஊரை சேர்ந்த பிரபா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு நாகர்கோயில் பகுதியில் குடித்தனம் நடத்தி வருகின்றார். இதற்கிடையே கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்த புவனேஸ்வரி, தனது தந்தையும் இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு புவனேஸ்வரி தந்தைக்கு சொந்தமான கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், புவனேஸ்வரி சடலத்தை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதில் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள், புவனேஸ்வரி தற்கொலைக்கு கணவர் பழனிராஜ் தான் காரணம் என்றும், அவரை கைது செய்யக்கோரி கணவர் வீட்டில் உடலை வைத்தனர்.

தகவலறிந்த மழையூர் காவல்நிலைய போலீசார், உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, புவனஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள், இந்த சம்பவத்திற்கு காரணமான கணவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி புவனஸ்வரியின் சடலத்தை அவரது கணவர் பழனிராஜ் வீட்டு வாசலில் வைத்து நேற்று எரித்தனர். இதனால் பழனிராஜ் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்று விட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கறம்பக்குடி மற்றும் மழையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi