புதுச்சேரி சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: புதுச்சேரி சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தம் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறை, பெற்றோர்கள் புகார் அளித்த பின்பும் அலட்சியமாக செயல்பட்டதே சிறுமியின் கொலைக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் முழுவதுமே அண்மைக்காலமாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருவதன் விளைவே இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நிகழாமல் இருக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி போதைப் பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதோடு, சிறுமியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனவும் புதுச்சேரி மாநில அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிஎஸ்பி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய வேண்டும்: செல்வப்பெருந்தகை கோரிக்கை

ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

ஆம்ஸ்ட்ராங் மரணம்: அஞ்சலி செலுத்த நாளை சென்னை வருகிறார் பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி!!