குறிப்பாக, புதுச்சேரி, பூம்புகார், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த 30ம் தேதி மீன்பிடிக்க வந்தபோது பழவேற்காடு மீனவர்களுக்கும், காரைக்கால் மீனவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து 41 படகுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பாலைவனம் காவல்துறையினர் இரு தரப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி படகுகளை விடுவித்தனர். இந்நிலையில் நேற்று புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் பழவேற்காடு கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வந்தபோது பழவேற்காடு மீனவர்களுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டது. பழவேற்காட்டைச் சேர்ந்த மீனவர்கள் லோகேஷ், பிரதாப் படுகாயம் அடைந்தனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கடலோர பாதுகாப்பு படையினர் மூலமாக பிற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பழவேற்காடு எல்லைக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பழவேற்காடு மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை தொடர்ந்து, புதுச்சேரி மீனவர்கள் 10 பேர் மீது திருப்பாலைவனம் போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பழவேற்காடு கடலில் உள்ளூர் மீனவர்களுக்கும், புதுச்சேரி மீனவர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தடுக்க, வெளிமாநில மீனவர்கள் பழவேற்காடு கடல் பகுதிக்குள் எல்லை மீறி நுழையாத வகையில் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.