புதுச்சேரி: புதுச்சேரியில் மாதத்தில் 4 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்க அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு பற்றாக்குறை உள்ளதால் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே செவிலியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. புதிய பணியிடங்களும் உருவாக்கப்படாமல் இருக்கின்றது. இதனிடையே, ஏராளமான செவிலியர் பற்றாக்குறை இருப்பதாக, தற்போது பணியாற்றும் செவிலியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் மாதத்தில் 4 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்க அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு மேல் மருத்துவ விடுப்பு தேவையெனில் மருத்துவ வாரிய அதிகாரிகள் முன் ஆஜராகி காரணத்தை தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய அறிவிப்பானது செவிலியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செவிலியர் சங்கத்திடம் கேட்டபோது, அரசானது புதிய பணியிடங்களை நிரப்பாமல், ஏற்கனவே உள்ள செவிலியர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது செவிலியர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தும். கொரோனா காலத்தில் ஏராளமான செவிலியர்கள் பணியாற்றியுள்ளனர், சிலர் உயிரிழந்துள்ளனர். தனது உயிரையும் துச்சமென மதித்து பணியாற்றக்கூடிய செவிலியர்களுக்கு அரசு ஆதரவாக இருக்க வேண்டுமே தவிர கட்டுப்பாடு விதிக்கக்கூடாது என தெரிவித்துள்ளனர்.