புதுச்சேரியின் 25வது ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாசநாதன் பதவியேற்றார்..!!

புதுச்சேரி: புதுச்சேரியின் 25வது ஆளுநராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாசநாதன் பதவியேற்றார். புதுச்சேரி ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, புதுவை பொறுப்பு கவர்னர் பதவி கூடுதலாக அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, புதுச்சேரியின் பொறுப்பு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மராட்டிய மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். புதுவையின் புதிய ஆளுநராக கேரளா மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி கைலாசநாதனை ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். இதையடுத்து புதிய கவர்னர் கைலாசநாதன் நேற்று மதியம் 12 மணியளவில் புதுச்சேரிக்கு வந்தார். அவரை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

இந்நிலையில், இன்று ஆளுநர் மாளிகையில் புதுச்சேரியின் 25வது ஆளுநராக கைலாசநாதன் பதவியேற்றார். சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், புதிய ஆளுநருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்ற கைலாசநாதனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு