புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிகாததை கண்டித்து திமுக – காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி சட்டப்பேரவை காலை கூடியதும் மகளிருக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்தாது தொகுதி அளவில் நடைபெற வேண்டிய பணிகள் உள்ளிட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். இதற்கு சபாநாயகர் அனுமதி அழைக்காததை கண்டித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து சபாநாயகர் செல்வம் சந்திரயான், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார். அப்போது மீண்டும் சபைக்கு திருப்பிய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அலுவல் பட்டியலில் இல்லாததை எப்படி பேசலாம் என கேள்வி எழுப்பினர். அதற்கு சபாநாயகர் நன்றி அறிவிப்பு அலுவல் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்தார். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக செயல்படும் மாவட்ட ஆட்சியர் வல்லவனை உடனடியாக இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி பாஜக எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன் ஆகியோர் சட்டமன்ற படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை சட்டசபை நிகழ்வுகள் காலை 9.37 மணிக்கு தொடங்கி 23 நிமிடங்களில் முடிவடைந்தது. முதலில் தணிக்கைத்துறை தலைவர் அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார். பின்னர் 2023-ம் ஆண்டு புதுவை எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழத்தல், தடுத்தல் திருத்த சட்டம் வரைவை அமைச்சர் லட்சுமி நாராயணனும், சரக்கு மற்றும் சேவை வரி முன் வரைவை முதல்வர் ரங்கசாமியும் தாக்கல் செய்தனர். இந்த 3 மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து காலை 10 மணிக்கு சபையை கால வரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.