பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுவதால்தான் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன: ஐகோர்ட்டில் அரசு வாதம்

சென்னை: பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது என்றும், இது அரசின் கொள்கை முடிவு என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதிட்டார்.

அவர் வாதிடும்போது, ரம்மி நேரடியாகவும், ஆன்லைனில் விளையாடுவதும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. இரண்டுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இரண்டையும் ஒப்பிடவே முடியாது. ரம்மி விளையாட்டை நேரில் விளையாடும்போது தான் அதை திறமைக்கான விளையாட்டாக கருத முடியும். 18 வயதுக்கு குறைவானவர்களை விளையாட அனுமதிப்பதில்லை என்று சுய அறிவிப்பு அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இது சம்பந்தமான சுய அறிவிப்பு எப்படி சரி பார்க்கப்படுகிறது என்று விளக்கப்படவில்லை.

ரம்மி, திறமைக்கான விளையாட்டாக இருக்கலாம். அதற்காக சூதாட்டத்துக்கு அனுமதிக்கலாமா, ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள், வென்ற பணம் முழுவதையும் பெற முடியாது. அதில் ஒரு பகுதி ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்துக்கு செல்கிறது. ஆனால் நேரடியாக விளையாடும் போது இதுபோல நடப்பதில்லை. ஆன் லைன் விளையாட்டுகளால், 76 சதவீத குழந்தைகள், கண்பார்வை பாதிப்பு, படிப்பு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆன்லைன் விளையாட்டுகளை அரசு ஒழுங்குபடுத்த முடியுமே தவிர, தடை செய்ய முடியாது என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. ஆனால், எது சூதாட்டம், குழந்தைகள் எப்போது விளையாடலாம் என்று அரசு எப்படி முறைப்படுத்த முடியும், தனிப்பட்ட நபர்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த முடியாது என்பதால் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த முடியாது. பொது ஒழுங்குக்கு இடையூறு ஏற்படுத்துவதால் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவு என்று வாதிட்டார். மூத்த வழக்கறிஞரின் வாதம் முடிவடையாததால், வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

வடமதுரை மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதர் மண்டிக்கிடக்கும் தொகுப்பு வீடுகள்: சீரமைக்க கோரிக்கை

ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சோழவரம் அருகே குளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு