செல்லப்பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்காக தனி விதிமுறைகளை வகுக்க கோரி பொதுநல வழக்கு: 8 வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என்று தனி விதிமுறைகளை வகுக்கக் கோரிய விண்ணப்பத்தை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, திருவேற்காட்டை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஆண்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வீடுகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்போர், விடுமுறை அல்லது தொழில் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் போது, பிராணிகளை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அவற்றை சேர்த்துச் செல்கின்றனர். நாட்டில் பல முறைப்படுத்தப்படாத செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. முறையான தகுதியில்லாத நபர்களை பராமரிப்பாளர்களாக நியமித்துள்ள இந்த மையங்களில் பிராணிகள் உரிய முறையில் பராமரிக்காமல் சில நேரங்களில் அவை இறந்து விடுகின்றன.

வர்த்தக நோக்கில் செயல்படும் இதுபோன்ற மையங்களை ஆய்வு செய்த பிறகே ஒப்புதல்கள் வழங்கவேண்டும். இதுபோன்ற மையங்களை முறைப்படுத்துவதற்காக, பிரிட்டனில் 2018ம் ஆண்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பிரிட்டனைப் போல செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களை முறைப்படுத்த தனி விதிமுறைகளை வகுக்கக் கோரி அரசுக்கு மனு அனுப்பினேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மிருக வதை தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு தனி விதிமுறைகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து 8 வாரங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது