Saturday, September 28, 2024
Home » மக்கள் நிகழ்வாக மாற்றப்பட்ட ஜி 20: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை

மக்கள் நிகழ்வாக மாற்றப்பட்ட ஜி 20: வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை

by Karthik Yash

புதுடெல்லி: டெல்லியில் நாளை தொடங்க உள்ள ஜி20 மாநாட்டையொட்டி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் பல்வேறு வழிகளில் தனித்துவமானது என்பதை நிரூபித்துள்ளது. இது வளரும் நாடுகளின் முன்னுரிமைகளிலும் முக்கியப் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தியுள்ளது. உலகளாவிய தெற்கின் குரலை ஓங்கி ஒலித்துள்ளது. பருவநிலை நடவடிக்கை மற்றும் நிதி, எரிசக்தி மாற்றங்கள், நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகள் அமலாக்கம், தொழில்நுட்ப மாற்றம் போன்ற துறைகளில் குறிக்கோளை வலுப்படுத்தியுள்ளது.

இந்தியாவை ஓர் அசாதாரண ஜி 20 தலைமைத்துவமாக மாற்றுவதற்குக் கூடுதலாகச் செய்யப்பட்டது என்னவென்றால், ஜி 20 தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் மற்றும் நடவடிக்கைகளில் நாடு முழுவதிலுமிருந்து பெருமளவில் மக்களைப் பங்கேற்கச் செய்ததாகும். தலைமைத்துவம் என்பது அரசின் உயர் பதவிகளோடு நிறுத்தப்படுவதல்ல. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் ஆர்வம் மிக்கப் பங்கேற்பின் மூலம், இந்தியாவின் ஜி 20 உண்மையிலேயே மக்கள் ஜி 20 ஆக மாறியுள்ளது.

60 நகரங்களில் சுமார் 220 கூட்டங்கள்; ஜி 20 கூட்டங்களில் ஏறத்தாழ 30,000 பிரதிநிதிகள்; இவற்றின் துணை நிகழ்வுகளில் 100,000 க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள்; நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் ஈடுபாடு என, ஜி 20 எண்ணற்ற வழிகளில் மக்களை ஈடுபடுத்தியது. மாநில அளவிலும், மாவட்டம், வட்டம், பஞ்சாயத்து மற்றும் பள்ளிக்கூடம் வரையிலும் எனப் பல நிலைகளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள், ஜி 20, விழிப்புணர்வை அதிகரித்தன. இந்த நிகழ்வுகள், 15.7 கோடி மாணவர்கள், 25.5 லட்சம் ஆசிரியர்கள், 51.1 லட்சம் சமூக உறுப்பினர்கள் என 23.3 கோடி பேரின் கவனத்தை ஈர்த்தன. நாடு முழுவதும் ஜி 20 மாநாட்டைக் கொண்டாடுவதன் மூலம், இந்தியாவுக்கும் உலகிற்கும் பயனளிக்கும் நாடு தழுவிய ஓர் அனுபவத்தை உருவாக்க நாம் முயற்சி செய்துள்ளோம். இது இந்தியாவை உலகத்திற்குத் தயார் செய்துள்ளது; உலகை இந்தியாவுக்குத் தயார் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi