செய்யூர்: முருக்கம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டித்தரவேண்டும்என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்டது முருக்கம்பாக்கம் ஊராட்சி. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியின் அருகே ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த 15 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாகும். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டிடம் நாளடைவில் வலுவிழந்து கட்டிடத்தில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மழை காலங்களில் மழைநீர் விரிசல் வழியாக கசிந்து சுவர்கள் முழுவதும் ஈரம் கோர்த்துவிடுகிறது. மேலும் கனமழையின்போது கட்டிடத்தினுள் மழைநீர் ஒழுகுவதால் அலுவலக பணியாளர்கள் அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல்வேறு தேவைகளுக்காக இங்கு வரும் கிராம மக்கள் கட்டிடத்தின் நிலையை கண்டு எப்பொழுது கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் அலுவலகத்திற்கு வரவே அஞ்சுகின்றனர். பழமை வாய்ந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய ஊராட்சி மன்றம் கட்டிடம் கட்டிதர வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஊராட்சி மன்ற அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு நலன் கருதி பழுதடைந்துள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி தலைவர் கிளியப்பனிடம் கேட்டதற்கு, ”எங்கள் ஊராட்சிக்கு இதுவரை போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் ஊராட்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டி தரக்கோரி மனு அளித்துள்ளேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்” என்றார்.