தர்மபுரி: தர்மபுரியில் தாமக தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணியாக, கடந்த 3 மாதங்களாக மக்கள் சந்திப்பை அதிகரித்துக் கொண்டு இருக்கிறேன். வரும் தேர்தலில், 39 தொகுதிகளிலும் எங்களுடைய பலத்தை நிரூபிப்போம். எங்கள் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம் கேட்டு மேலவையில் குரல் கொடுத்திருக்கிறோம்.
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கு பதிலாக, போராட்டம் நடத்தி நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளனர். மக்கள் மன்றத்தில் புதிய மசோதாக்கள் கொண்டு வரும் போது, அதுபற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகளுக்கு பொறுப்பு உண்டு. அதனை அவர்கள் செய்யத் தவறி விட்டனர். வாக்காளர்களின் எதிர்பார்ப்பை எதிர்க்கட்சிகள் பூர்த்தி செய்யவில்லை. இவ்வாறு ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார்.