மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் நடந்த பட்டினப்பிரவேச நிகழ்ச்சியில், 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளை பக்தர்கள் பல்லக்கில் அமர வைத்து மடத்தை சுற்றி 4 வீதிகளிலும் தோளில் தூக்கி வீதியுலா வந்தனர்.
இவ்வாறு பல்லக்கில் அமர வைத்து மனிதரை, மனிதர்கள் தூக்கி செல்வதை தடை செய்யக் கோரியும், இந்த பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உட்பட பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து குத்தாலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பட்டினப்பிரவேச விழா நேற்று அதிகாலை 3 மணி வரை நடந்தது. அதன் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர்.