சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய பட்ஜெட்டில் அப்பட்டமான அரசியல் பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூ.12,210 கோடி. ஆனால், தமிழகத்திற்கு சல்லிக் காசு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தோடு, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், தாம்பரம் – செங்கல்பட்டு விரைவு மேம்பால திட்டத்திற்கு ஒப்புதலும், நிதியும் கோரி தமிழக முதல்வர் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதி இருந்தார்.
ஆனால், தமிழகத்திற்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்திருக்கிறார்கள். ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் தலைமை தபால் நிலையம் அருகில், தாராபூர் டவர் முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.