ஜனநாயகம் காக்க குண்டடிப்பட்டேன்: மாஜி அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு

வாஷிங்டன்: ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு குண்டபடிப்பட்டேன் என்று முன்னாள் அதிபர் டிரப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் கடந்த 14ம் தேதி நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் டிரம்பின் காதை தோட்டோ துளைத்தது. அதேவேளை, இந்த தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பவரை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றனர்.

துப்பாக்கிசூட்டிற்கு பின்னர் முதல்முறையாக கிராண்ட் ரேபிட்ஸ் என்ற இடத்தில் நடந்த குடியரசு கட்சி கூட்டத்தில் டிரம்ப்,துணை அதிபர் வேட்பாளர் ஜே.டி.வான்ஸ் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய டிரம்ப்,‘‘ நான் ஜனநாயகத்துக்கு ஆபத்தானவன் என்று ஜனநாயக கட்சியினர் என்னை விமர்சிக்கின்றனர்.ஜனநாயகத்திற்கு நான் என்ன செய்தேன். கடந்த வாரம் ஜனநாயகத்துக்காக குண்டடிப்பட்டேன். ஆட்சிக்கு வந்த பின்பு புராஜக்ட் 2025 என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தேன். இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலானது என்று ஜனநாயக கட்சியினர் கூறுகின்றனர்.

எனக்கு அது பற்றி ஒன்றும் தெரியாது. ஜனநாயக கட்சியினர் இது தொடர்பாக பொய் பிராசரங்களை மேற்கொள்கின்றனர். நான் இன்று உங்கள் முன்னால் நின்றிருக்க மாட்டேன். ஒரு சிறப்பான அற்புதம் நிகழ்ந்ததால்தான் நான் உங்கள் முன் வந்துள்ளேன்.சனிக்கிழமையன்று நடந்த எனக்கு நிகழ்ந்த கொடூரமான சம்பவத்திற்கு பின்னர் எனக்கு ஆதரவு அளித்து அன்பு காட்டிய அமெரிக்கர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

கிராண்ட் ரேப்பிட்ஸ் நகர் கூட்ட அரங்கில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் வழக்கத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். கூட்ட அரங்கைச் சுற்றி இருந்த சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கட்டிட உச்சியில் நிறுத்தப்பட்ட ரகசிய காவல்துறை பிரிவினர், ஏதேனும் அசம்பாவிதம் நடக்கிறதா என்று பருந்துப் பார்வையில் தங்களது பணியை மேற்கொண்டனர். கூட்டம் நடைபெற்ற வான் டெல் அரங்கு 12,000 பேர் அமரக்கூடியது. டிரம்ப்பைக் காண அரங்கின் வெளியே 4.8 கிலோமீட்டர் தூரம் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

 

Related posts

சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் குழந்தைகள் நல அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு

கரூர் மாவட்டம் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து நீர் திறக்க உத்தரவு

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவ முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு