தஞ்சை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தஞ்சையில் நேற்று கூறியதாவது: மக்களவைத் தேர்தல் 7வது கட்டத்தோடு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலில் மோடி மேற்கொண்ட பிரசாரங்கள் குறித்து பொதுமக்களிடம் கடும் விமர்சனம் உள்ளது. தமிழ்நாட்டுக்கு வந்த போது ஒரு வித பிரசாரத்தையும், வடமாநிலங்களுக்கு சென்ற போது மதங்களை வேறுபடுத்தியும், பின்னர் வடக்கு, தெற்கு என்றும் கூறினார். தொடர்ந்து குழந்தை ராமர் குடிசையில் இருந்தார், அவரை நாங்கள் கொண்டு வந்து கோபுரத்தில் வைத்துள்ளோம் என்றார்.
இது எதுவும் பயன்பெறாத நிலையில் தானே கடவுள் என கூறினார். பின்னர் அந்த பிரசாரமும் போதவில்லை என்பதால் நான் தியானம் மேற்கொள்கிறேன் எனக் கூறி குமரி முனையில் விவேகானந்தர் பாறையில் வந்து தியானம் செய்தார். பிரதமர் கடந்த 10 ஆண்டுகளில் செய்த சாதனைகளை பற்றி பிரசாரம் செய்யவில்லை. 2014, 2019 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி எங்கும் பேசவில்லை. மாறாக மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் மத, சாதி ரீதியான பிரச்னைகளை பேசியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.