சென்னை: டிஎஸ்பியாக இருந்து கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்ற 46 பேருக்கு பணியிடம் வழங்கி உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 1996ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 1996ம் ஆண்டு பணியில் சேர்ந்த 64 பேர் இன்ஸ்பெக்டர்களாக பணியற்றி தற்போது டிஎஸ்பிக்களாகவும் பணியில் உள்ளனர். டிஎஸ்பிக்களாக பணியில் உள்ள 64 பேருக்கு மார்ச் மாதம் கூடுதல் எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து 64 கூடுதல் எஸ்பிக்களில் முதற்கட்டமாக 46 பேருக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை பூந்தமல்லி கமிஷனராக இருந்த முத்துவேல் பாண்டி ஆவடி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த வேல்முருகன் செங்கல்பட்டு மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த சத்திய மூர்த்தி செங்கல்பட்டு மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் எஸ்பியாகவும், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பியாக இருந்த யுவராஜ் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பியாகவும், தாம்பரம் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக இருந்த வெற்றிச்செழியன் மாநில சைபர் குற்ற புலனாய்வு பிரிவு தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், ராயப்பேட்டை உதவி கமிஷனராக இருந்த சார்லஸ் ஷாம் ராஜதுரை காஞ்சிபுரம் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், ஆவடி ஆணையராக குற்ற ஆவண காப்பகம் உதவி கமிஷனராக இருந்த அர்னல்டு ஈஸ்டர் ஆவடி ஆணையரக நுண்ணறிவு பிரிவு கூடுதல் துணை கமிஷனராகவும், வேப்பேரி உதவி கமிஷனராக இருந்து ஹரிக்குமார் திருவள்ளூர் மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும், ராயபுரம் உதவி கமிஷனராக இருந்த லட்சுமணன் சென்னை உயர் நீதிமன்ற பாதுகப்பு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் என தமிழ்நாடு முழுவதும் 46 கூடுதல் எஸ்பிக்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.