இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அதிகாரி, போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர், எம்பி., எம்எல்ஏ., மேயர் துணை மேயர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம்பெற்று இருப்பார்கள். இந்த நடைபயிற்சி சாலையில் மாநகராட்சி சார்பில் நடப்பதற்கு ஏற்ற வழி பாதை, சுகாதார வளாகம், குடிநீர் வசதி, மின்விளக்கு, ஓய்வு எடுக்க கல் இருக்கைகள், நடந்து செல்லும் தூரத்தை காட்டும் கிலோ மீட்டர் கல்தூண் வழிகாட்டிகள், நடப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் போன்றவை இடம்பெற்றிருக்கும். மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள உயர் அதிகாரிகளும், உறுப்பினர்களும் நடை பயிற்சியில் பங்கேற்பார்கள். அன்றைய தினம் நடை பயிற்சி பாதையில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற மருத்துவ பரிசோதனைகளையும் இலவசமாக செய்வார்கள்.
இந்தத் திட்டம் குறித்து மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜேந்திரன் கூறுகையில், \”நடப்போம் நலம் பெறுவோம்\” என்ற தமிழக அரசின் சுகாதார நடை பயிற்சி திட்டம் பொதுமக்கள் மத்தியில் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்படுகிறது. உடல் பருமன், நடைப்பயிற்சி இன்மையால் ஏற்படும் நோய்கள் மற்றும் உயிரிழப்பு போன்றவைகளை தவிர்க்க இந்தத் திட்டம் வகை செய்கிறது. இந்த நடைபயிற்சி பாதையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 8 கிலோ மீட்டர் தூரம் என்பது சராசரியாக பத்தாயிரம் அடி தூரம் நடப்பது ஆகும். இந்த குறிப்பிட்ட சுகாதார நடை பயிற்சி சாலையில் மட்டுமின்றி பொதுமக்கள் அவர்களது பகுதியில் உள்ள இடங்களிலும் தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை இத்திட்டம் வலியுறுத்துகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெறுகிறது என்றார்.