டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவை காவல்துறை அமல்படுத்தியது. இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலை முதல் சற்று குறைந்துள்ளது. அம்மாநிலங்களில் நிவாரணம், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழையால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக கடந்த 8ம் தேதி முதல் மேற்கண்ட மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஏராளமான சுற்றுலா பயணிகளும் அடங்கும்.
டெல்லியை பொறுத்தவரை கடந்த 67 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வரும் நிலையில், யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் டெல்லி போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். யமுனை ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களும் டெல்லி வாசிகளும் யமுனை ஆற்றங்கரையோரங்களிலும் வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளுக்கும் செல்லக்கூடாது. யமுனை ஆறு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த மற்றும் கரையோர பகுதிகளுக்கு மக்கள் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லியில் வெள்ளநீரை தடுக்க நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.